Saturday, April 13, 2013

காகபுசுண்டர் ஞானம் 80-5


தானென்ற கற்பமடா மதுவுண் டக்கால் சஞ்சார சமாதியென்ப ததற்குப் பேரு ஊனென்ற பசிதீரும் கோபம் போகும். உதயகிரி தனிற்சென்றூ டுருவிப் பார்க்கத் தேனென்ற திரையேழுந் தீய்ந்து போகுந் திரிவாரே உச்சிநடுச் சென்ற போது கோனென்ற கருவியெல்லா மொடுங்கிப் போகுங் கூற்றுவனா ராட்டமதைப் பார்க்கலாமே. 16 பார்க்கலாம் ஒருகாலை உயரத் தூக்கிப் பாடுவா னொருகாலைத் தாழ விட்டே ஏர்க்கையிலே மேல்நோக்குங் காலைக் கேளாய் என்மகனே மதியென்ப ததற்குப் பேரு கார்க்கையிலே கீழ்நோக்குங் காலை மைந்தா கண்டுபார் ரவியென்று கருத லாகும் மார்க்கமுடன் அண்டவுச்சி மேலே தானும் மகத்தான வன்னியிருப் பிடந்தான் பாரே. 17 பாரப்பா இதையறியார் சித்தர் கூடிப் பார்தனிலே அறுபத்து நாலு யோகம் ஆரப்பா இருக்குமென்று வெவ்வே றாக அலைந்தலைந்து கெட்டவர்க ளனந்தங் கோடி நேரப்பா ராசாங்க யோகம் பார்த்து நிலையறிந்து கண்டவனே கோடிக் கொன்று வீரப்பா பேசாமல் மனக்கண் ணாலே விந்துவடா பாய்ந்ததலம் வெளியைக் காணே. 18 காணாத காட்சியெல்லாங் கண்ணிற் கண்டு காகமடா புசுண்டரென்று பேரும் பெற்றேன் தோணாமல் நானலைந்து சிறிது காலம் துருவமென்ற பிரமத்தை யடுத்துக்கேட்க நாணாமல் அண்டவுச்சி தன்னி லேதான் நாடியே மனத்தாலே நாட்ட மாகக் கோணாமல் பாருமென்றே எனக்குச் சொல்லக் கூசாமல் மனமொன்றா யிருத்தி னேனே. 19 இருத்தியே இருதயத்தில் மனமொன் றாக சுகபர மாம்பொருளை யிருத்தி யொன்றாய் நிருத்தியே வெகுகோடி கால மட்டும் நிருவிகற்பச் சமாதியிலே நிறைந்தெந் நாளும் பொருத்தியே லலாடக்கண் திறந்து பார்க்கப் பூலோக மெங்கு மொன்றாய் நிறைந்தென் மைந்தா! கருத்தொன்றாய் நிறுத்தியடா கபாடம் நீக்கிக் காரணத்தைக் கண்டுவிளை யாடுவாயே. 20 விளையாடிப் போதமய மாக வுந்தான் வெட்டாத சக்கரத்தின் வெளிச்சம் பார்த்து நிலையான அண்டமதில் நெற்றிக் கண்ணை நீயறிந்தே அரவுவிடந் தன்னைப் போக்கி அலையாம லாரொருவ ருறவு மற்றே ஆயிழையாள் மோகமதை யதட்டித் தள்ளி மலையாமற் பிரமமே துணையென் றெண்ணி மவுனமென்று மந்தனையு மடக்கி நில்லே. 21 நில்லென்றால் லோகத்தில் மனிதர் தாமும் நிட்டையுடன் சமாதியுமே பொருந்தா மற்றான் வல்லவர்போல் வேதபுரா ணங்காவ் யங்கள் மந்திரங்கள் கோடானு கோடி யென்றும் சொல்லுவார் கோவிலென்றுந் தீர்த்த மென்றுந் திருடர்கள்தா னலைந்தலைந்து திரிவார் மட்டை வெல்வதொரு பிரமநிலை யறியா மற்றான் வேரற்ற மரம்போலே விழுவார் பாரே. 22 பாரப்பா மலரெடுத்து லிங்கம் வைத்துப் பார்த்தீப லிங்கத்தைப் பணியா மற்றான் வீரப்பா நீராட்டிப் பூசை செய்து வீணர்கள்தாம் கத்தபம்போற் கதறு வார்கள் தேரப்பா மலரதனைக் கிள்ளும் போது செத்தசனம் போலாச்சுத் தெளிந்து பாரு காரப்பா மனங்கொண்டு பரத்தி னூடே கண்டவரே கயிலாசத் தேகந் தானே. 23 தானென்ற பிரமத்தை யடுத் திடாமல் தாரணியில் தெய்வமடா அனந்த மென்றும் ஊனென்ற குருவென்றுஞ் சீட னென்றும் உதயகிரி பாராத வுலுத்த மாடு வேனென்ற பொய்களவு கொலைகள் செய்து வேசையர்மே லாசைவைத்து வீண னாகிக் கோனென்ற குருபாதம் அடைய மாட்டான் கூடுவான் நரகமதில் வீழ்வான் பாரே. 24 பாரப்பா நாக்கையுந்தான் அண்ணாக் கேத்திப் பார்த்தனிலே பார்த்தவர்க்குப் பலித மில்லை ஆரப்பா கண்வெடிக்குந் தேகம் போகும் அடயோக மென்பார்க ளாகா தப்பா! சாரப்பா மனந்தனையண் ணாக்கில் நேரே சார்ந்துமிகப் பார்க்கையிலே வாசி தானும் வீரப்பா மேலடங்குங் கீழ்நோக் காது வெட்டாத சக்கரத்தை யறிய லாமே. 25 அறியலாம் மனந்தானே உயிர்தா னாகும் அண்டத்திற் சேர்ந்திடவே ஆகும் முத்தி பரியேறிச் சவாரியுமே நடத்த லாகும் பஞ்சமா பாதகங்கள் பறந்தே போகும் விரிவான மனந்தனையும் அணுவ தாக்கி விட்டகுறை தொட்டகுறை விதியைப் பார்த்துக் குறியான குண்டலியா மண்ட வுச்சி கூறுகிறேன் முக்கோண நிலைய தாமே. 26 தாமென்ற உலகத்தில் மனித ரோடே சஞ்சாரஞ் செய்யாமற் றனித்து நில்லே ஓமென்ற ஊண் மிகுந்து உண்டி டாதே ஓரமாய் வழக்கதனை உரைத்தி டாதே ஆமென்ற அட்சரத்தை மறந்தி டாதே ஆயாச மாகவுந்தான் திரிந்தி டாதே காமப்பேய் கொண்டவனோ டிணங்கி டாதே காரணத்தைக் கண்டுவிளை யாடு வாயே. 27 விளையாடிக் கருநெல்லி பறித்தே உண்ணு வேகாத தலையாகும் விரும்பிப் பாரு மலையாமல் வெண்சாரை பிடித்தே யுண்ணு மைந்தனே சாகாக்கா லதுவே யாகும்; அலையாமல் சோதியதன் பாலை யுண்ணே அக்கினியாங் கம்பமடா சுழுனை யாச்சுக் கலைநாலு போகிறதை யெட்டிற் சேரு கபடமற்ற தேகமடா கண்டு பாரே. 28 கண்டுகண்டு மனந்தானே அண்டஞ் செல்லக் கலைநாலும் எட்டிலையுஞ் சேர்ந்து போகும் தண்டுமுண்டு செய்யாதே மனம்வே றானால் தற்பரத்தை யெப்போதும் அறிய மாட்டாய் தொண்டுசெய்து பெரியோரை யடுத்து மைந்தா தொழுதுநீ யென்னூலை யன்பாய்க் கேளு விண்டுமவர் சொலாவிட்டா லிந்நூல் சொல்லும் வெற்றிபெற மனவடக்கம் வைத்துப் பாரே. 29 பாரப்பா விஞ்சைமந்த்ரம் என்பார் வீணர் பாயடா விஞ்சைகிரி தன்னில் மைந்தா! ஆரப்பா சென்றேறிப் பார்க்கும்போது அதீதமுள்ள விஞ்சைமந்த்ரம் அனந்தங் காட்டும்; நேரப்பா சிருட்டிப்புச் சங்கா ரங்கள் நிமிடத்திற் செய்திடுவாய் நிலையைக் கண்டால் வீரப்பா அமிர்தமுந்தான் குமிழி பாயும் வேறில்லாக் கனிதனையு முண்க லாமே. 30 உண்கலாம் பிரமத்தி லடங்கும் போதே உறுதியுள்ள அண்டத்தி லுருகிப் பாயுந் திங்கலாந் தோணுமடா அமர்தச் சீனி தித்திப்புப் பாலுடனே திடமாய் மைந்தா! தங்கலாந் தேகமது அறியா மற்றான் சட்டையுமே கழன்றுமிகத் தங்கம் போலே பொங்கலாம் மெய்ஞ்ஞானத் தீபத் தாலே பூரித்துப் பார்த்திடவே புவன மொன்றே. 31

காகபுசுண்டர் ஞானம் 80-4


காப்பு

எண்சீர் விருத்தம்
சிறந்தபரா பரமாகி யெங்குந் தானாய்த்
     தீர்க்கமுடன் ரவிமதியுஞ் சுடர்மூன் றாகிப்
பறந்தருளும் ஐம்பூத மாயை தோன்றிப்
     பல்லாயிரங் கோடி அண்டம் படைத்த போதம்
வரம்பெருகி யனந்தனந்தம் உயிரு மாகி
     மதபேத மாகவுந்தான் வடிவைக் காட்டிச்
சரம்பெருக அண்டத்தி லெழுந்தே நின்ற
     சச்சிதா னந்தமதைப் பணிகு வோமே.
1  

ஓமென்ற சுழுனையடா அண்ட வுச்சி 
     ஓமுடிந்த பட்டணத்துக் கப்பாற் சென்று
நாமென்று சொல்லற்று யோக ஞானம்
     நாட்டுகிறேன் அஞ்சனமுந் திலதப் போக்கும்
வாமென்ற வயித்தியமும் அட்ட கர்மம்
     வாதமென்ற வித்தையெல்லாந் தெளிவ தாகக்
காமென்ற வீடமதிற் கண்டு தேறிக்
     காட்டுகிறேன் மெய்ஞ்ஞானக் கருவைப் பாரே.
2 

பாரேநீ யோகமென்ற வழியைச் சொல்வேன்;
     பத்தடா ஐம்புலனைப் பரத்தி னூடே
சீரொருவர் தெரியாமல் மதங்கள் பேசித்
     திருவான வுச்சியிலே சேரா மற்றான்
ஆரொருவன் ஆதாரம் வெவ்வே றென்றே
     அடுக்கடுக்காய்ப் பன்னிரண்டு தலங்க ளென்று
வீரேதான் பேசியே மெலிந்து போவான்.
     விடமுண்ட அண்டமதை விரும்பிக் காணே.
3

காணப்பா தலமெல்லாம் அண்ட வுச்சி
     கமலமடா பதினெட்டாங் கோட்டிற் சென்று
பூணப்பா மனத்தையுந்தான் பிசகொட் டாமற்
     பூட்டடா பிரமத்திற் புகுந்தெந் நாளும்
வீணப்பா மந்திரங்க ளொன்று மில்லை
     விதியில்லை மதியில்லை கெதியு மில்லை
தோணப்பா தோணுமடா மனமொன் றான
     சுத்தமுடன் நீயிருந்து தவஞ்செய் வாயே.
4 

செய்யப்பா வாசிமுனி மகனே கேளு
     தீர்க்கமுடன் முன்னுரைத்த ஆயி ரத்தில்
மெய்யப்பா சரக்குநீத் துவகை யெல்லாம்
     மேன்மையுடன் கட்டினங்கள் உருக்கி னங்கள்
பொய்யப்பா சொல்லவில்லை ரத்னப் போக்குப்
     புனிதமுடன் சரியாகச் சொல்லிப் போட்டேன்
வையப்பா இந்நூலில் மவுன மெல்லாம்
     வகையாகச் சொல்லுகிறேன் பணிந்து கேளே.
5

கேளப்பா கேசரமே அண்ட வுச்சி
     கெட்டியாய்க் கண்டவர்க்கே மவுன மாகும்
ஆளப்பா பரப்பிரம யோக மென்றே
     அடுக்கையிலே போதமுந்தான் உயரத் தூக்கும்
வாளப்பா கெவுனமணி விந்து நாதம்
     வலுத்ததடா கெட்டியாய்த் திரண்டு போகும்
நாளப்பா அண்ட மெல்லாஞ் சத்தி யோடு
     நடனமிடுஞ் சிலம்பொலியுங் காண லாமே.
6 

காணலாம் பிரமத்தில் நிர்ண யந்தான்
     காட்டுகிறேன் வாசிமுனி கருவாய்க் கேளு
பூணலாம் அண்டவுச்சி தன்னில் நின்று
     பொறிகளையு முண்டாக்கிப் புவனந் தன்னில்
தோணலாம் உயிர்ப்பயிரைப் படைத்தெந் நாளுந்
     தொந்தமென்னும் ஏழுவகைத் தோற்ற மாகி
ஆணலாம் நாலுவகை யோனி யாகி
     அண்டமடா அனந்தனந்த மான வாறே.
7

வாறான பிரமத்தில் நடுவே மைந்தா!
     வந்ததடா ரவிமதியுஞ் சுடர்மூன் றாகிக்
கூறாகப் பின்னியடா கீழே பாயுங்
     கூறுகிறேன் இருக்கண்ணில் ஒளிவைக் கேளு;
வீறான அண்டவுச்சி முனைக்கப் பாலே
     வெற்றியுடன் நரம்பதுதான் விழுது போலே
நேராக இருகண்ணிற் பின்ன லாகி
     நிச்சயமா யொளிவாகி நிறைந்தார் பாரே.
8

 பாரப்பா பரப்பிரமம் ஒளிவி னாலே
     பத்திலே நரம்புவழி பாயும் போது
ஆரப்பா இருகண்ணில் ஒளிவ தாகி
     அண்டமெல்லாம் ஏகமாய்த் தெரிய லாச்சு
காரப்பா நரம்பென்ற விழுது வட்டம்
     கபாலத்தில் முக்கூறாய்ச் சுழுனை யாச்சு
வீரப்பா காதுக்கும் நாக்குக் குந்தான்
     வெற்றிபெற இன்னமுந்தா னுரைக்கக் கேளே.
9

 கேளப்பா மூலமடா லிங்கந் தன்னில்
     கிருபையுடன் தண்டுக்குங் கீழ்மே லாக
நாளப்பா தமர்போலே பிடர் மார்க்கம்
     நன்றாக ஓடுமடா நரம்பி னூடே
வாளப்பா அண்டமுட்டி வுயர மைந்தா!
     வலுவாக முன்சொன்ன நரம்பி னூடே
தேளப்பா சேர்ந்துமிகப் பின்ன லாகிச்
     சிறந்திடவே புருவமத்தி யாகும் பாரே.
10

 பாரடா புருவமத்தி யேதென் றக்கால்
     பரப்பிரம மானதோர் அண்ட வுச்சி
நேரடா முன்சொன்ன நரம்பு மத்தி
     நிலைத்ததடா சுழுனையென்று நினைவாய்ப் பாரு
வீரடா அண்ணாக்கில் நேரே மைந்தா!
     மேவடா மனந்தனையுஞ் செலுத்தும் போது
காரடா சுழுனையிலே மனந்தான் பாய்ந்து
     கலந்தைந்து பூதமுந்தான் ஒன்றாய்ப் போமே.
11

போமடா முன்சொன்ன நரம்பி னூடே
     பூரித்து ரவிமதியுஞ் சுடர்தாம் மூன்றும்
ஆமடா பின்னியுங் கீழே பாயும்
     அந்தரங்கந் தனைப்பார்க்க அடங்கிப் போகும்
நாமடா வெளிதிறந்து சொல்லி விட்டோம்
     நாதாந்த பரப்பிரம நாட்டந் தன்னை
ஓமடா விந்துவுந்தான் அண்ட வுச்சி
     உறுதியுடன் சித்தமதை யூன்றிப் பாரே.
12 

பாரான சாகரமே அண்ட வுச்சி
     பதினாலு லோகமெல்லாம் பரத்தி னூடே
சீராகத் தெரியுமடா மவுன மார்க்கஞ்
     சித்தான சித்துவிளை யாடிநிற்கும்.
வீரான மந்திரங்கள் பிறந்த தெப்போ?
     விஷ்ணுவென்றும் பிரமனென்றும் வந்த தெப்போ
கூரான முக்குணங்க ளுதித்த தெப்போ?
     கூறாத அட்சரத்தின் குறியைக் காணே.
13 

காணார்கள் பிரம்முந்தா னுதிக்கு முன்னே
     கருணையுள்ள மந்திரங்கள் பிறந்த துண்டோ?
தோணாமல் மந்திரங்க ளனந்தங் கற்றுச்
     சுழுனையென்ற மூக்குநுனி தன்னைப் பார்த்து
வீணாகத் திரிந்து மிகப் பித்தர் போலே
     வேரோடே கெட்டுழல்வான் விருதா மாடு;
கோணாம வண்ணாக்கின் நேரே மைந்தா!
     குறிப்பறிந்து பார்த்தவர்க்கே முத்தி தானே.
14 

முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது
     மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும்
சத்தியடா மனந்தானே யேக மாகத்
     தனித்திருந்து நித்திரையைத் தள்ளி மைந்தா!
புத்தியடா பிரமத்திற் புகுந்து கொண்டாற்
     பூலோக மெல்லாந்தான் பணியு முன்னை;
எத்தியே திரியாமற் பிடரி மார்க்கம்
     ஏறுகின்ற வாசியுந்தான் கற்பந் தானே.
15

காகபுசுண்டர் ஞானம் 80-3


 சித்தர்களுக்குச்  சாதியும் மதமும் இல்லை என்பதை காகபுசுண்டர் தம்
பாடலில் எடுத்துக் கூறுகின்றார்.
“சாண் அப்பா சாதிகுலம் எங்கட்கில்லை 
கருத்துடனே என்குலம் சுக்கிலந்தான் மைந்தா”
     இவர்  அத்வைத  கொள்கையில்  உறுதியுடையவர்  என்பது  இவரது
ஞானப்பாடல்களால்  புலனாகிறது.   சித்தர்கள்  பெரும்பாலும்  அத்வைதக்
கொள்கையினர்  என்பது  ஆய்வாளர்  முடிவு. ஜீவான்மாவும் பரமான்மாவும்
வேறல்ல.  இரண்டும்  ஒன்றேதான்.   இதை  உணர்வதுதான்  மெய்ஞானம்.
தன்னையும்  பரமத்தையும்  ஒன்றாக  அறிந்து சமாதி நிட்டையில் இருப்பது
தான் ஜீவன் முக்தி நிலை என்றும், இதுவே சிவோகம் பாவனை என்றும்,
     பரமான்மா  என்பது  சூட்சுமப்  பொருள்;  அதாவது கண்ணில் காண
முடியாத சூட்சுமப்  பொருள்  என்றும் அதைக்  கண்ணால் காண முடிகின்ற
தூலப் பொருளில் தான் அறிய முடியும் என்றும் அதனால் நீ பரமான்மாவைக்
காண  வேண்டுமானால்  உன்  உடம்பிலேயே  அதனை  அறிந்து  கொள்ள
வேண்டும்.
     இந்த உண்மையை உணர்ந்துகொள்ள வேண்டும் என்றால், எள்ளுக்குள்
எண்ணெய் அடங்கியிருக்கும் தன்மையையும் ஒரு சிறிய விதையினுள் பெரிய
மரம்  ஒன்று  அடங்கியிருக்கும்  சூட்சுமத்தையும்  பசுவின்  பாலிலே நெய்
கலந்திருக்கின்ற  தன்மையையும்  பூவினுள்வாசனை  கலந்திருக்கின்ற  நிறம்
கலந்திருக்கின்ற  உத்தியையும்,  மயில்  முட்டையில்  அழகான பலவண்ண
தோகை  ஒளிந்திருக்கின்ற  ரகசியத்தையும்  நீ  உணர்ந்து கொள்வாயானால்
உன்னுள் இறைவன் உறைந்து இருக்கும் இரகசியத்தை நீ அறிந்து கொள்வாய்.

அகங்காரம்  காரணமாக  இதை  மறந்து  இதைக்  கண்டறிவதற்கான
சாதனத்தையும்  நீ  மறந்து  விடுவாயானால்  உனக்கு  அபரோட்ச ஞானம்
கிட்டாது.  பரமாத்மாவுடன்   ஒன்று  மட்டும்  முக்தி  நிலையும்  உனக்குக்
கிட்டாது என்கிறார் காகபுசுண்டர்.

“வேணும் என்றால் எள்ளுக்குள் எண்ணெய் போலும்
     வித்தனிடம் அடங்கி நின்ற விருட்சம் போலும்
காணுகின்ற பூவில் உறை வாசம் போலும்
     கன்று ஆவின் பாலிலே நெய்யைப் போலும்
தோணுமயில் முட்டையின் மேல் வர்ணம் போலும்
     தூலம் அதி சூட்சுமம்தான் துலங்கி நிற்கும்
ஆணவத்தால் சாதனத்தை மறந்தாயானால்
     அபரோட்ச ஞானம், முத்தி அரிது தானே”

     காகபுசுண்டரின்  ஞானப்பாடல் அனைத்துமே  அந்தாதித் தொடையில்
அழகுறக் காணப்படுகின்றது.  காகபுசுண்டர்  உபநிடதம் என்ற தலைப்பிலான
மூன்று பாடல் தொகுப்பும் குறள் வெண்பா தொகுப்பு ஒன்றும் சித்தர் பாடல்
தொகுப்பில் காகபுசுண்டர் பாடியனவாகக் காணப்படுகின்றன.

     யோகம் அறுபத்து நான்கு என்பதை,
“அறுபத்து நால்யோக மவ்வளவுந் தள்ளி
     ஒருபொழுது முண்டுநிலை யோர்”

என்ற குறளிலும் சித்தர் பதினெண்மர் என்பதை,

“சித்தர் பதினெண்மர் செய்கையிற் றோன்றாத
 அத்தனரு ளும்புசுண்டன் யான்”

என்ற குறளிலும் புலப்படும் இவர் இப்பதினாறு பாடல் தொகுதியை,

“யோகமுடன் கற்ப முரைத்தேனீ ரெட்டினில்
 வேகமுடன் கண்டுஉணரு வீர்”

என்று கூறி முடிக்கின்றார்.


காகபுசுண்டர் ஞானம் 80-2 ,


“தானென்ற பிரமத்தை யடுத்திடாமல்
     தரணியில் தெய்வமடா அனந்த மென்றும்” (24)
வரிகளில் சுட்டிக்காட்டி,
“முத்தியடா மந்திரத்தை நினைக்கும்போது
     மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும்
சக்தியடா மனந்தானே யோக மாகத்
     தனித்திருந்து நித்திரையைத் தள்ளி மைந்தா!
புத்தியடா பிரமத்திற் புகுந்து கொண்டாற்
     பூலோக மெல்லந்தான் பணியு முன்னே;
எத்தியே திரியாமற் பிடரி மார்க்கம்
     ஏறுகின்ற வாசியுந்தான் கற்பந் தானே”
என்று   வாசியோக   மார்க்கத்தை   இறைவனை  அடையும்  மார்க்கமாக
அறிமுகப்படுத்துகின்றார்.
“அறியலாம் மனந்தானே உயிர்தா னாகும்
     அண்டத்திற் சேர்ந்திடவே ஆகும் முத்தி
பரியேறிச் சவாரியுமே நடத்த லாகும்
     பஞ்சமா பாதகங்கள் பறந்தே போகும்
விரிவான மனந்தனையும் அணுவ தாக்கி
     விட்டகுறை தொட்டகுறை விதியைப் பார்த்துக்
குறியான குண்டலியா மண்ட வுச்சி
     கூறுகிறேன் முக்கோண நிலைதாமே” (26)

என்று  வாசியோகத்தின்  மூலம்  குண்டலி  யோகம்  செய்து இறைவனைக்
காணும் மார்க்கத்தைப் போதிக்கின்றார். மேலும்,
“தாமென்ற உலகத்தில் மனித ரோடே
     சஞ்சாரஞ் செய்யாற் றனித்து நில்லே
ஓமென்ற ஊண் மிகுந்து உண்டி டாதே
     ஓரமாய் வழக்கதனை உரைத்தி டாதே
ஆமென்ற அட்சரத்தை மறந்தி டாதே
     ஆயாச மாகவுந்தான் திரிந்தி டாதே

காமப்பேய் கொண்டவனோ டிணங்கிடாதே
     காரணத்தைக் கண்டு விளையாட்டு வாயே”
“விளையாடிக் கருநெல்லி பறித்தே உண்ணு
     வேகாத தலையாகும் விரும்பிப்பாரு
மலையாமல் வொண்சாரை பிடித்தே யுண்ணு
     மைந்தனே சாகாக்கா லதுவே யாகும்
அலையாமல் சோதியதன் பாலை யுண்ணே
     அக்கினியாம் கம்பமடா சுழுமுனை யாச்சுக்
கலைநாலு போகிறதை யெட்டிற் சேரு
     கபடமற்ற தேகமடா கண்டு பாரே” (28)
     இது  மனம்  காமவயப்படாமல்  வாசியோகம் மூலம் குண்டலி எழுப்பி
நித்திய தேகம் பெறும் முறையை உபதேசித்தது ஆகும்.
     இவர்  கூறும்  இந்த அக்கினி கம்பம் சுழுமுனை நாடியாகும். இதனை,
“நேரப்பா நெடுந்தூரம் போகும்போது
     நிச்சயமாய்க் கம்பத்தின் நிலையைக் கண்டேன்;
வீரப்பா அக்கினி போல் படர்ந்து நிற்கும்
     வெளியொன்றுந் தெரியாம லிருக்குந்தானே”
என்று  சுழுமுனைக்கு  விளக்கம் தருகின்றார். இந்த சுழுமுனையின் முடிவில்
மனோன்மணி வீற்றிருக்கும் நிலையை,
“இருக்குமடா எங்குமொன்றாய் அக்கினிக் கம்பம்
     என்மகனே கம்பத்தின் நடுவே மைந்தா
உருக்கமுடன் பெண்ணரசி யொன்றி நிற்பாள்” (44)
என்று கூறுகின்றார்.
     வாசியோகமே காயசித்தி உபாயமென்பதை,
“சாற்றுகிறே னென்மகனே வாசி நாதா
     சத்தியமா யண்டத்திற் செல்லும் போது

போற்றுகிற அக்கினியும் பிரவேசித்துப்
     புலன்களைந்துஞ் சேர்ந்ததனாற் போத மாகும்
மாற்றிலையும் அதிகமடா வுன்றன் தேகம்
     மைந்தனே அபுரூப மாகுமப்பா
வாற்றியே நிழற் சாய்கை யற்றுப் போகும்
     வலுத்ததடா காயசித்தி யாச்சப் பாரே” (55)
     இவர்  உலகில்  நிலவும்  சாதி  வேற்றுமையைத்  தம்  பாடல்களில்
வெகுவாகக்    கண்டித்துள்ளார்.    குருவைத்   தேர்ந்தெடுப்பதில்   மிக
எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று  கூறும் இவர் போலி குருவானவர்
உண்மையான பிரமத்தை அறியாதவர்கள்  என்றும், அவர்கள் வெறும் வேத
ரகசியங்களை அறிந்ததினால் மட்டும் மெய்ஞானியராக மாட்டார்கள் என்றும்,
வெறும் காவியுடையும் யோக தண்டம் என்னும் முககோல் காலில் பாத குறடு
இவைகள்  மட்டும்  ஒருவரைக் குருவாக உருவகப்படுத்த இயலாது. இவர்கள்
எல்லாம்  ஆணவம்  கொண்ட பிறர் அஞ்சத்தக்க வேடதாரிகள் என்று கூறி,
இத்தகைய  குருமார்கள்   பணம்   பறிப்பதிலேயே  குறியாக  இருப்பார்கள்
என்பார் காகபுசுண்டர்.
“குறியென்ற உலகத்தில் குருக்கள் தானும்
     கொடிய மறை வேதம் எலாம் கூர்ந்துபார்த்து
அறியாமல் பிரமத்தைப் பாராமல்தான்
     அகந்தையாய்ப் பெரியோரை அழும்புபேசி
விரிவான வேடம் இட்டுக் காவிபூண்டு
     வெறும் பிலுக்காய் அலைந்திடுவான் நாயைப் போலே;
பரியாச மாகவும் தான் தண்டும் ஏந்திப்
     பார்தனிலே குறடு இட்டு நடப்பான் பாரே”

“பாரப்பா சீடர்களை அழைப்பான் பாவி
 பணம்பறிக்க உபதேசம் பகர்வோம் என்பார்”

காகபுசுண்டர் ஞானம் 80 1



                          காகபுசுண்டர் ஞானம் 80 


 கயிலாய மலையில் ஒருநாள் மும்மூர்த்திகளும் தேவர்களும் கூடியிருக்கும் சமயத்தில் சிவபெருமானுக்குத் திடீரென்று ஒரு சந்தேகம் எழுந்தது. 
“இந்த உலகம் எல்லாம் பிரளய காலத்தில் அழிந்து விட்ட பிறகு எல்லோருக்கும் குருவான நமசிவாயம் எவ்விடத்தில் தங்கும்?
 பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேசுவரன், சதாசிவம் ஆகிய ஐவரும் எங்கே இருப்பார்கள் என்பது யாருக்காவது தெரியுமா?” என்று கேட்டார். சிவபெருமானின் கேள்விக்கு யாருக்கும் பதில் தெரியவில்லை.
 எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் விஷ்ணுவும் மௌனமாயிருந்தார்.  மார்க்கண்டேயனுக்கு ஆச்சரியம். விஷ்ணுவுக்குக் கூடவா விடை தெரியவில்லை? மார்க்கண்டேயனின் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட விஷ்ணுவும், “உங்கள் கேள்விக்குப் பதில் சித்தர்களிடம்தான் கிடைக்கும். குறிப்பாக புசுண்ட முனிவரைக் கேட்டால் தெரியும். அவரை இங்கு அழைத்து வந்து கேட்ப தென்றால் வசிட்ட முனிவரைத்தான் அனுப்ப வேண்டும்” என்றார். தேவர்களுக்கெல்லாம் ஒரே ஆச்சரியம். தேவர்களான தங்களால் யூகிக்க முடியாத ஒன்றை சித்தர் ஒருவர் யூகித்துக் கூறுவார் என்பதை அவர்களால் நம்ப முடியவில்லை. எதனால் நீர் இப்படிக் கூறுகின்றீர்? என்று அனைவரும் விஷ்ணுவைக் கேட்டனர். பிரளய காலத்தில் எல்லாம் அழிந்து விட்ட நிலையில் எனக்கு ஏதும் வேலையில்லாததால் நான் ஆலிலையின் மீது அறிதுயிலில் ஆழ்ந்திருந்தேன். என்னுடைய சக்கரம் வெகு வேகமாகச் சுழன்று கொண்டிருந்தது. அந்த வேகத்தில் அதனைக் கட்டுப்படுத்துவது என்பது யாராலும் முடியாத காரியம். ஆனால் அப்போது அங்கு வந்த காகபுசுண்டர் எப்படியோ அந்தச் சக்கரத்தை ஓடாமல் நிறுத்திவிட்டு அதைக் கடந்து சென்றார். அதனால் அவர் எல்லாம் வல்லவர் என்பதை அறிந்தேன் என்றார் விஷ்ணு. இப்படியெல்லாம் அறிந்தவர் என்று தேவர்களாலேயே ஒப்புக் கொள்ளப்பட்ட இந்த காகபுசுண்டருக்கு எப்படி இந்தக் காரணப்பெயர் ஏற்பட்டது என்பதற்கு போக முனிவர் விளக்கம் கூறுகின்றார். முன்பு ஒரு காலத்தில் சக்தி கணங்கள் மது உண்டு நடனமாடிக் களித்திருக்கையில் அப்போது அங்கு சிந்திய மதுத்துளிகள் குடிநீரில் கலந்துவிட, அந்த நீரினைப் பருகிய தேவலோகத்து அன்னங்களும் மனமயக்கத்துடன் மகிழ்ச்சியில் ஆடிக்கொண்டிருந்தன. இந்த மதுக்களிப்பு நடனத்தை சிவனும் பார்வதியும் கண்டு மகிழ்ந்திருக்கும் வேளையில் மகிழ்ச்சியின் எல்லையில் சிவகணமானது காகத்தின் உருவில் அன்னத்தைச் சேர அன்னம் அப்போதே கர்ப்பமுற்று இருபத்தொரு முட்டைகள் இட, இருபது அன்னக் குஞ்சுகளையும் ஒரு காகத்தையும் பொரித்தது. இருபது அன்னங்களும் அநேக நாட்கள் வாழ்ந்து முக்தியடைய, சிவகலையால் பிறந்த காகம் மட்டும் அழியாமல் இருக்கும் பேறு பெற்றது. அந்தக் காகமே இந்த காகபுசுண்டர் என்று சித்தர் பாடல்கள் இவர் வரலாற்றைத் தெரிவிக்கின்றன. வர ரிஷியின் சாபத்தால் உலகத்தில் சந்திர குலம் விளங்க ஒரு வெள்ளாட்டின் (விதவை) வயிற்றில் பிறந்தவர் இவர் என்றும், பிரளய காலத்தில் காக்கை வடிவெடுத்து அப்பிரளயத்திலிருந்து தப்பிப் பிழைத்து அநேக கோடி வருடங்கள் ஜீவித்து இருந்தாரென்றும் ஒரு வரலாறு தெரிவிக்கின்றது. காகபுசுண்டர் அன்னத்தின் முட்டையிலிருந்து பிறந்தவரா? வெள்ளாட்டின் பிள்ளையாகப் பிறந்தவரா? என்னும் ‘ரிஷிமூலம்’ இன்னும் உறுதிப்படுத்த முடியாத தேவரகசியம். இவர் தமிழ் நாட்டில் பிறந்தவர். இவர் உருவம் கருமையாக இருக்கலாம்; எதையும் கூர்ந்து பார்த்து உண்மை காணும் தன்மையுள்ளவராய் இருக்கலாம். உண்மைகளைக் காணப் பலவிடங்களிலும் அலைந்து திரிந்தவராயிருந்த மையால் இவர் காகபுசுண்டர் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று சாமி சிதம்பரனார் கூறுகின்றார். இவர் காக்கை வடிவில் இருந்து பல இடங்களிலும் சுற்றித் திரிந்தமைக்கு இவர் பாடல்களிலேயே ஆதாரம் உள்ளது. “காகம் என்ற ரூபமாய் இருந்து கொண்டு காரணங்கள் அத்தனையுமே கருவாய்ப் பார்த்து வேகமுடன் வெளியோட்ட நிலையாய்ப் பார்க்க வெகுதூரம் சுற்றிஇன்னும் விபரம் காணேன்” என்ற வரிகளால் இஃது உறுதிப்படுகின்றது. தன்னுள்ளே இறைவன் கோயில் கொண்டுள்ளதை யறியாமல் வீணே இந்த மனிதர்களெல்லாம் வெளியில் பல தெய்வங்கள் உண்டு என்று அலைந்து திரிகின்றனரே என்பதை,

Sunday, December 2, 2012

மனிதனின் ஒரு வருடம் = தேவர்களின் ஒரு நாள் ( தேவர்களின் பகல் நேரம் = சூரியன் வடக்கு நோக்கி செல்லும் ஆறு மாத காலம் –உத்தராயணம் ) ( தேவர்களின் இரவு நேரம் = சூரியன் தெற்கு நோக்கி செல்லும் ஆறு மாத காலம் –தட்சினாயணம் ) 365 தேவர்களின் நாள் = 1 தேவர்களின் வருடம் 4800 தேவர்களின் வருடம் = கிருத யுகம் / சத்ய யுகம் 3600 தேவர்களின் வருடம் = திரேத யுகம் 2400 தேவர்களின் வருடம் = துவப்பார யுகம் 1200 தேவர்களின் வருடம் = கலி யுகம் 12000 தேவர்களின் வருடம் = 1 சதூர் யுகம் 1000 சதூர் யுகம் = பிரம்ம உடைய ஒரு பகல் பொழுது 1000 சதூர் யுகம் = பிரம்ம உடைய ஒரு இரவு பொழுது 14 மனுக்கள் இந்த பிரபஞ்சத்தை தலைமை வகிப்பார்கள் ஒரு மனுவின் காலம் = ஒரு மன்வந்த்ரம் பிரம்மா வின் ஒரு பகல் + பிரம்மா வின் ஒரு இரவு = பிரம்மா வின் ஒரு நாள் பிரம்மா வின் 365 நாட்கள் = பிரம்மா வின் ஒரு வருடம் பிரம்மா வின் வாழ் காலம் = 100 பிரம்ம வருடங்கள் பிரம்மா வின் வாழ் காலம் முடிவு = மகாப்ரலயம் ( மொத்த உலகத்தின் அழிவு ) பிரம்மா வின் வாழ்காலத்தின் முடிவில் மகாப்ரலயம் நிகழும்.அப்போது பிரம்மாவும் அழிக்கபடுவார். அதன் பிறகு 100 பிரம்மா வருடங்களுக்கு ஒரு உருவாக்கமும் இருக்காது. பிறகு பகவான் விஷ்ணு மீண்டும் ஒரு பிரம்மா வை உருவாக்குவார். பிறகு உருவாக்கம் தொடரும். கல்பம் / உருவாக்கம் = பிரம்மா வின் ஒரு பகல் பொழுது = 4320 மில்லியன் மனித வருடங்கள் ப்ரலயம் / அழிவு = பிரம்மாவின் ஒரு இரவு பொழுது = 4320 மில்லியன் மனித வருடங்கள் நான்கு யுகங்களின் சுழற்சி ஆயிரம் முறை நடப்பது ஒரு கல்பம் ஆகும். சத்ய யுகம் = 1728,000 மனித வருடங்கள் : 100 % நன்மக்கள் ; 0 % தீயமக்கள் திரேத யுகம் = 1296,000 மனித வருடங்கள் : 75 % நன்மக்கள் ; 25 %தீயமக்கள் துவப்பார யுகம் = 864,000 மனித வருடங்கள் : 50% நன்மக்கள் ; 50 %தீயமக்கள் கலியுகம் = 432,000 மனித வருடங்கள் : 25 % நன்மக்கள் ; 75 % தீயமக்கள் ஒவ்வொரு கல்பமும் 14 மன்வந்த்ரம்( காலம்) ஆக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மன்வந்த்ரமும் 71 சுழற்சி வரை நீடிக்கும். ஒவ்வொரு மன்வந்த்ரத்திலும் மனு தலைமை வகிக்கிறான்.

Sunday, September 9, 2012

பிரச்ன உபநிஷதம்-ஒரு கண்ணோட்டம்

வேதங்கள்: உலகின் பெரும் பகுதி அறியாமை இருளில் மூழ்கி, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, பாரதத் திருநாடு ஆன்ம ஒளியில் விழித்தெழிந்தது. அதன் தவப் புதல்வர்களாகிய ரிஷிகள், இருளைக் கடந்து, பொன்னிறத்தில் ஒளிரும் மாபெரும் இறைவனை நான் அறிந்து கொண்டேன். அவரை அறிவதால் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும். வேறு எந்த வழியும் இல்லை (வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்யவர்ணம் தமஸ பரஸ்தாத் தமேவ விதித்வா திம்ருத்யு மேதி நான்ய; பந்தா வித்யதே யனாய-சுவேதாஸ்வர உபநிஷதம் 3.8), அழியாத அமரத்துவத்தின் குழந்தைகளே கேளுங்கள்(ச்ருண்வந்து விச்வே அம்ருதஸ்ய புத்ரா-சுவேதாஸ்வதர உபநிஷதம் 2.5) என்று பூமியில் வாழ்பவர்களை மட்டுமல்லாமல், பிற உலகங்களில் வாழ்வோரையும் அறைகூவி அழைத்தனர். குறித்து வைக்கப்பட்ட சரித்திரமோ, பாரம்பரியத்தின் மங்கிய வெளிச்சமோ கூட ஊடுருவ முடியாத காலத்தின் அந்த நீண்ட நெடுந்தொலைவில் இந்த உலகைப் புனிதமாக்கியபடி வாழ்ந்த அந்த ரிஷிகள் அனுபூதியில் கண்ட உண்மைகளின் தொகுப்பே வேதங்கள். உலகிலேயே மிகப்பழைய நூல் இந்த சிந்தனைக் கருவூலம்தான். இது எப்போது தோன்றியது என்பது யாருக்கும் தெரியாது. இக்கால ஆராய்ச்சியாளர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். இது எட்டாயிரம் அல்லது ஒன்பதாயிரம் வருடங்களுக்கு முன்பு தோன்றியதாக இருக்கலாம்.... ஆனால் அன்று போலவே இன்றும் அவை புதுமை மாறாமல் இருக்கின்றன; ஏன், முன்னைவிட புதுப் பொலிவுடன் திகழ்வதாகவே கூறலாம். வேதங்கள் யாராலும் எழுதப்பட்டவை அல்ல. என்றென்றும் நின்று நிலவுகின்ற உண்மைகளின் தொகுப்பே வேதங்கள். புவியீர்ப்பு விதி, அது கண்டறியப்படும் முன்னரே இருந்தது, மனித இனம் முழுவதும் அதை மறந்து விட்டாலும் இருக்கும். அவ்வாறுதான் ஆன்மீக உலகின் விதிகளும்.... அவை கண்டு பிடிக்கப்படுவதற்கு முன்னரும் இருந்தன, நாம் அவற்றை மறந்தாலும் இருக்கும் என்று கூறுகிறார் சுவாமி விவேகானந்தர். ரிஷிகள் அந்த விதிகளை வெளிப்படுத்தினார்கள், அவ்வளவுதான். அவ்வாறு ரிஷிகள் வெளிப்படுத்திய அந்த உண்மைகள் பின்னாளில் வியாச முனிவரால் நான்காகத் தொகுக்கப்பட்டன. அவை ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள். ஒவ்வொரு வேதமும் மூன்று முக்கியப் பிரிவாகப் பிரிக்கப்படுகின்றன. அவை சம்ஹிதை (பல்வேறு தேவர்களிடம் பிரார்த்தனைகள்), பிராம்மணம்(யாக விவரங்கள்), ஆரண்யகம்(உபநிஷதங்கள்; அறுதி உண்மையைப்பற்றிய ஆராய்ச்சி) உபநிஷதங்கள்: உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம், ஸ்ரீமத் பகவத்கீதை மூன்றும் ப்ரஸ்தான த்ரயம் என்று வழங்கப்படுகின்றன. அறுதிப் பிரமாணமாக அமைந்த மூன்று நூல்கள் என்பது இதன் பொருள். வேதகாலச் சிந்தனையின் மணிமகுடமாகத் திகழ்பவை உபநிஷதங்கள். அறுதி உண்மையைப் பற்றிய ஆராய்ச்சியில் மனித மனத்தால் தொடக்கூடிய எல்லையை உபநிஷதங்கள் தொட்டுவிட்டன என்றே உலகின் சிந்தனையாளர்கள் கருதுகின்றனர். உபநிஷதங்கள் பல. அவற்றுள் 108 பொதுவாகக் கணக்கில் கொள்ளப்படுகின்றன. அவற்றில் பதினான்கு உபநிஷதங்கள் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. அவை ஈச, கேன, கட, ப்ரச்ன, முண்டக, மாண்டூக்ய, ஐதரேய, தைத்திரீய, சாந்தோக்ய, பிருஹதாரண்யக, சுவேதாஸ்வதர, கௌசீதக, மஹாநாராயண, மைத்ராயணி உபநிஷதங்கள் ஆகும். இவற்றும் முதல் பத்து உபநிஷதங்களுக்கு ஸ்ரீசங்கரர் விளக்கவுரை எழுதியுள்ளார். 14 உபநிஷதங்களும் கீழ்க்கண்ட பட்டியலின்படி நான்கு வேதங்களில் அமைத்துள்ளன. வேதம்-உபநிஷதம் ரிக்- ஐதரேய, கவுசீதகி யஜுர்- ஈச, கட, தைத்திரீய, பிருஹதாரண்யக, சுவேதாஸ்வதர, மைத்ராயணீ, மஹாநாராயண சோம-கேன, சாந்தோக்ய அதர்வண- ப்ரச்ன, முண்டக, மாண்டூக்ய பிரச்ன உபநிஷதம் அதர்வண வேதத்தைச் சேர்ந்த உபநிஷதம் இது. ப்ரச்ன என்றால் கேள்வி. இந்த உலகம் எப்படி உண்டாயிற்று, உயிரினங்கள் எவ்வாறு தோன்றின, மனிதன் என்பவன் யார், கடவுள் யார், மனிதனுக்கும் கடவுளுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பன போன்ற சில அடிப்படைக் கேள்விகளை நெஞ்சில் சுமந்துகொண்டு பாரதத்தின் பல பகுதிகளிலிருந்தும் 6 பேர் அறிவைத் தேடி புறப்படுகின்றனர். பிப்பலாத முனிவரைப்பற்றி கேள்விப்பட்டு அவரிடம் செல்கின்றனர். 6 பேரும் அவரிடம் கேட்கின்ற 6 கேள்விகளுக்கப் பதிலாக அமைந்திருப்பதால் இது ப்ரச்ன உபநிஷதம் எனப்படுகிறது. இந்த 6 கேள்விகளும் இதில் 6 அத்தியாயமாக அமைந்துள்ளன; மொத்தம் 63 மந்திரங்கள் உள்ளன. மாண்டூக்ய உபநிஷதத்தில் பேசப்படுகின்ற விழிப்பு, கனவு, ஆழ்ந்த தூக்கம் என்ற மூன்று நிலைகளை ஆராய்வதால், பிரச்ன உபநிஷதத்தை மாண்டூக்ய உபநிஷதத்தின் துணை உபநிஷதமாகக் கருதுவதும் உண்டு. மையக் கரு: மனிதன், உலகம், இறைவன் என்ற முப்பொருள் உண்மைகளை உபநிதஷதங்கள் ஆராய்கின்றன. ஒவ்வோர் உபநிதஷதமும் தனக்கென்று ஒரு கோணத்தில் இந்த அடிப்படை உண்மைகளை அணுகுகின்றன. அறிவைத் தேடுகின்ற, 6 பேருடைய தேடலின் வெளிப்பாடாக பிரச்ன உபநிஷதம் இந்த உண்மைகளை ஆராய்கிறது. 6 பேர் கேட்ட 6 கேள்விகளும் இதோ 1. உயிரினங்கள் எங்கிருந்து தோன்றின? 2. மனிதனில் என்னென்ன சக்திகள் செயல்படுகின்றன? 3. அந்தச் சக்தி எப்படி செயல்படுகிறது? 4. மனிதன் தூங்கும்போது தூங்காமல் அவனில் விழித்திருப்பது யார்? 5. ஓங்கார தியானம் என்றால் என்ன? 6. ஆன்மா எங்கே இருக்கிறது? உயிரினங்கள், மனிதன், ஆன்மீக சாதனை, ஆன்ம அனுபூதி என்று அறிவுத்தேடல் படிப்படியாக ஆன்மீகத்தேடலில் நிறைவுறுவதைப் பிரச்ன உபநிஷதத்தில் காண்கிறோம். அடிப்படை ஆற்றலான பிராணனைப்பற்றி இங்கே சிறப்பாக ஆராயப்படுகிறது.வித்யைகள்: அறுதி உண்மையாகிய இறைவனை ஒவ்வொரு மனிதனும், ஒவ்வோர் உயிரும் சென்றடைவதே வாழ்க்கையின் லட்சியம், அதற்கான களமே உலகம். உலகம் தருகின்ற அனுபவங்களைப் பாடமாகக் கொண்டு, உலகில் வாழ்ந்த படியே அந்த லட்சியத்தை அடையுமாறு உபநிஷதங்கள் வலியுறுத்துகின்றன. இதற்கு ஒவ்வோர் உபநிதஷங்களும் தங்களுக்கென்று சில குறிப்பிட்ட பாதைகளைக் காட்டுகின்றன. இவை வித்யை எனப்படுகின்றன. வித்யைகள் எண்ணற்றவை. தற்போது சுமார் 35 வித்யைகள் மட்டுமே இந்த 14 முக்கிய உபநிஷதங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளன. காலங்கள் பல கடந்து விட்டதாலும், வேறு பல காரணங்களாலும் இந்த வித்யைகளின் செயல்முறையோ சரியான பொருளோ நமக்கு தெரியாமல் போய் விட்டது. பிரச்ன உபநிஷதத்தில் பரமபுருஷ வித்யை கூறப்பட்டுள்ளது. 5:2-7இல் அமைந்துள்ளது. ஓங்கார தியானம் பற்றியது இது. மொழிபெயர்ப்பு: ஸ்ரீசங்கரர் , ஸ்ரீமத்வர் போன்றோர் இந்த உபநிஷதத்திற்கு விளக்கவுரை எழுதியுள்ளனர். ஸ்ரீசங்கரரின் விளக்கவுரைக்கு ஸ்ரீஆனந்தகிரியும், ஸ்ரீமத்வரின் விளக்கவுரைக்கு ஸ்ரீராகவேந்திர தீர்த்தரும் மேலும் தெளிவுரை எழுதியுள்ளனர். ஸ்ரீராமானுஜர் உபநிஷதங்களுக்கு விளக்கவுரை எழுதவில்லை. அவரது கருத்தைத் தழுவி ஸ்ரீரங்கராமானுஜர் விளக்கவுரை எழுதியுள்ளார். இந்த மொழிபெயர்ப்பு, பிரச்ன உபநிஷதத்தை முதன்முதலாகப் படிப்பவர்களை நோக்கமாகக் கொண்டு செய்யப்பட்டுள்ளது. எனவே இரண்டு முக்கியமான விஷயங்கள் இந்த மொழிபெயர்ப்புக்கு அடிப்படையாக வைக்கப்பட்டுள்ளன. 1. தத்துவப் பின்னல்களைக் கருத்தில் கொள்ளவில்லை. இறைவன் என்ற மாபெரும் சக்தியுடன் நாம் தொடர்பு கொள்கிறோம் என்ற உணர்வுக்கு முதலிடம் கொடுத்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. 2. காலம், இடம் போன்ற இலக்கண நியதிகளுக்கும் மொழிபெயர்ப்பில் முக்கிய இடம் அளிக்கவில்லை. ஒரு வார்த்தை: உபநிஷதங்களை நமக்கு அளித்த முனிவர்கள் தங்களை முன்னிலைப்படுத்தி எதையும் கூறாமல், எங்களுக்கு அதனை விளக்கிய மகான்கள் இவ்வாறு கூறினார்கள் (இதி சுச்ரும தீராணாம் யே நஸ்தத் விசசக்ஷிரே ஈசாவாஸ்ய உபநிஷதம் 10,13) என்றே குறிப்பிடுகிறார்கள். அதாவது, இந்த உண்மைகள் தங்கள் திறமையால் பெறப்பட்டவை அல்ல, மகான்களின் அருளால் கிடைத்தவை என்று அவர்கள் கூறுவதுபோல் உள்ளது இது. நாம் எத்தகைய மனப்பாங்குடன் உபநிஷதங்களை அணுக வேண்டும் என்பதை இது சுட்டிக் காட்டுகிறது. வெறும் நூலறிவு கொண்டோ, சம்ஸ்கிருதப் புலமை கொண்டோ அவற்றின் உண்மையான பொருளை அறிந்து கொள்வது சாத்தியம் அல்ல. பிரார்த்தனைபூர்வமாக, உண்மையான சாதனை வாழ்வில் ஈடுபட்டு, மனம் தூய்மை பெற்று இறைவனை நோக்கி நாம் முன்னேறமுன்னேற இவற்றின் உட்பொருள் மேன்மேலும் ஆழமாக நமக்குப் புரியும். மீண்டும்மீண்டும் படித்து, மந்திரங்களின் பெருளை ஆழமாகச் சிந்தித்து, சாதனைகளிலும் ஈடுபட்டால்தான் உபநிஷதங்களை உண்மையாகப் புரிந்துகொள்ள முடியும்; அவற்றின் அற்புதத்தில் ஆழ்ந்து மனம் மகிழ முடியும். பல மந்திரங்களின் பொருள் சுலபத்தில் அறிந்து கொள்ளத் தக்கதாக இல்லை. பொருள் புரியவில்லை என்பதற்காகச் சோர்ந்துவிடாமல், புரிந்த மந்திரங்களின் பொருளை ஆழ்ந்து சிந்தித்து சாதனைகளில் உயர்வடைய முயற்சிக்க வேண்டும். சாந்தி மந்திரம்: எந்த ஒன்றையும் செய்யும்போது அதற்குரிய மனநிலை இருக்கப் பெறுவது இன்றியமையாதது. எந்தக் காரியத்தைச் செய்கிறோமோ அதற்குரிய மனநிலையை வரவழைத்துக்கொண்டு, அதன்பிறகு அந்தச் செயலில் ஈடுபடுவது சிறப்பான பலனை அளிக்கும். நமது கோயில்களில் பல பிராகாரங்கள் அமைந்திருப்பதன் காரணம் இதுவே. ஒவ்வொரு பிராகாரத்தில் சுற்றி வரும்போதும் மற்ற எண்ணங்களை எல்லாம் விட்டு, கடைசியாக கருவறையில் சென்று தெய்வத்தைத் தரிசிக்கும்போது, நம்மால் முழுமனத்துடன் தெய்வ சிந்தனையில் ஈடுபட முடிகிறது. அதுபோல், அனுபூதிக் கருவூலமான உபநிஷதங்களைப் படிக்கப் புகுமுன் நமது சிந்தனையை அவற்றுடன் இயைபுபடுத்த சாந்தி மந்திரங்கள் உதவுகின்றன. உபநிஷதங்களின் உண்மைப் பொருளை வெறும் புலமையால் உணர முடியாது. பணிவுடனும் வழிபாட்டு உணர்வுடனும் அணுகும்போது மட்டுமே அதனைப் புரிந்துகொள்ள முடியும். அத்தகைய மனப்பான்மையை மனத்தில் கொள்வதற்காக இந்த மந்திரங்கள் முதலில் ஓதப்படுகின்றன. பிரச்ன உபநிஷதத்திற்கான சாந்தி மந்திரம் இது. ஓம் பத்ரம் கர்ணேபி ச்ருணுயாம தேவா பத்ரம்பச்யேமாக்ஷபிர் யஜத்ரா ஸ்திரைரங்கைஸ் துஷ்ட்டுவாக்ம்ஸஸ்தனூபி வ்யசேம தேவஹிதம் யதாயு ஸ்வஸ்தி ந இந்த்ரோ வ்ருத்த ச்ரவா ஸ்வஸ்தி ந பூஷா விச்வ வேதா ஸ்வஸ்தி நஸ்தார்க்ஷ்யோ அரிஷ்ட்டநேமி ஸ்வஸ்தி நோ ப்ருஹஸ்பதிர் ததாது ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: தேவா-ஓ தேவர்களே! கர்ணேபி-காதுகளால்; பத்ரம்-நல்ல விஷயங்களை; ச்ருணுயாம-கேட்க வேண்டும்; யஜத்ரா-பூஜிக்கத் தகுந்தவர்களே; அக்ஷபி-கண்களால்; பத்ரம்-நல்ல விஷயங்களை; பச்யேம-காண வேண்டும்; ஸ்திரரங்கை-உறுதியான அங்கங்களுடன் கூடிய; தனூபி-உடலுடன்; யதாயு-ஆயுள் முழுவதும்; துஷ்ட்டுவாம்ஸ-உங்களைத் துதிக்க வேண்டும்; தேவ ஹிதம்-தேவர்களுக்கு நன்மை செய்த வண்ணம்; வ்யசேம-வாழ வேண்டும்; வ்ருத்த ச்ரவா-பழம்புகழ்பெற்ற; இந்த்ர-இந்திரன்; ந-நமக்கு; ஸ்வஸ்தி-நன்மை செய்யட்டும்; விச்வ-தேவா-எல்லாம் அறிகின்ற; பூஷா-சூரியன்; ந-நமக்கு; ஸ்வஸ்தி-மங்கலம் செய்யட்டும்; அரிஷ்ட்டநேமி-தீமையை அழிக்கின்ற; தார்க்ஷ்ய-கருடன்; ந-நமக்கு; ஸ்வஸ்தி-நன்மை செய்யட்டும்; ப்ருஹஸ்பதி-பிருகஸ்பதி; ந-நமக்கு; ஸ்வஸ்தி-நன்மை; ததாது-தரட்டும்! தேவர்களே! காதுகளால் நாங்கள் நல்ல விஷயங்களைக் கேட்க வேண்டும். பூஜிக்கத் தகுந்தவர்களே! கண்களால் நாங்கள் நல்ல விஷயங்களைக் காண வேண்டும். உறுதியான அங்கங்களுடன் கூடிய உடலுடன் ஆயுள் முழுவதும் உங்களைத் துதிக்க வேண்டும். தேவர்களுக்கு நன்மை செய்த வண்ணம் வாழ வேண்டும்! பழம்புகழ் பெற்ற இந்திரன் நமக்கு நன்மை செய்யட்டும். எல்லாம் அறிகின்ற சூரியன் நமக்கு மங்கலம் செய்யட்டும். தீமையை அழிக்கின்ற கருடன் நமக்கு நன்மை செய்யட்டும். பிருகஸ்பதி நமக்கு நன்மை தரட்டும்! உலகியலில் மூழ்கடிப்பதற்கான விஷயங்கள், உயர் வாழ்க்கையில் தூண்டுகின்ற விஷயங்கள் ஆகிய இரண்டுமே மனிதனின் முன்னால் வருகின்றன; அறிவாளி இரண்டாம் வகையைத் தேர்ந்தெடுக்கிறான் என்று கட உபநிஷதம் கூறுகிறது. அவ்வாறு நல்லவற்றையும் உயர்ந்தவற்றையும் தேர்ந்தெடுப்பதற்கு நமது உடம்பிற்கும் புலன்களுக்கும் பயிற்சி அளிப்பதற்கும், அந்த முயற்சியில் தேவர்களின் துணையை நாடுவதற்குமான மந்திரம் இது. தேவர்கள் யார்? அவர்களுக்கு நன்மை செய்வது என்பது என்ன? சூரியன் உதிப்பது, கடலில் அலைகள் எழுவது, நட்சத்திர மண்டலங்கள் வானவெளியில் வலம் வருவது என்று இயற்கையின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் சக்தியின் வெளிப்பாட்டைக் காண்கிறோம். இந்தச் சக்திகள் ஒவ்வொன்றையும் ஒரு தேவனாக உருவாக்கப்படுத்தினர் நமது முன்னோர், இந்திரன், வருணன், வாயு என்றெல்லாம் நமது வேதங்கள் கூறுகின்ற தேவர்கள் இத்தகைய இயற்கை ஆற்றலின் உருவகங்களே. மனித வாழ்வு வளம்பெற வேண்டுமானால் இந்த இயற்கை ஆற்றல்களை வளம்பெறச் செய்ய வேண்டும், அதாவது மனிதன் இயற்கையுடன் இயைந்து வாழ வேண்டும். உலகில் எத்தனை கோடி உயிரினங்கள் இருந்தாலும் அத்தனைக்கும் உணவும் வாழ வசதியும் வழங்குவதற்கு இயற்கை அன்னை தயாராகவே இருக்கிறாள். ஆனால் அதற்கு அவளுடன் இயைந்து வாழ்வது இன்றியமையாதது. இயற்கையை நாம் அழித்தால் நாமும் அழிவோம். மாறாக நாமும் இயற்கையும் பரஸ்பரம் பேணி வாழ்ந்தால் இயற்கையும் வாழும், நாமும் வாழ்வோம். இந்தப் பரந்த கருத்துடன் உபநிஷதம் ஆரம்பிக்கிறது.